கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தைத் தயாரிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது. காலா, 2.0 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரஜினி, அரசியல் பரபரப்புகளுக்கிடையே இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்வீட் செய்ததாவது:
தன் வாழ்நாளின் கனவுப் படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜுக்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் படக்குழுவுக்கு எல்லையில்லா சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும் ரஜினி சாருக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. சூப்பர் ஸ்டார் - கார்த்திக் சுப்புராஜ், அற்புதமான கூட்டணி என்று ட்வீட் செய்துள்ளார்.
இதையடுத்து ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பார் எனத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி படங்களுக்கும் அடுத்ததாக இயக்கியுள்ள மெர்குரி படத்துக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கபாலி, காலா படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ரஜினி படங்களுக்கு இசையமைக்கவுள்ளார் சந்தோஷ் நாராயணன்.