இந்தியாவில் முதல் நான்கு வார வசூலாக ரூ. 282 கோடி வசூலித்துள்ளது பத்மாவத் படம்.
பாலிவுட் இயக்குர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள 'பத்மாவத்' திரைப்படத்தில், ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்நிலையில், பல்வேறு தடைகளைக் கடந்து, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்தத் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
சர்ச்சைக்குரிய 'பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிராக, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இப்போராட்டங்களின் எதிரொலியாக, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் 'பத்மாவத்' படத்தை திரையிடமாட்டோம் என்று மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள்
சங்கம் அறிவித்தது.
எனினும் சர்ச்சைகளால் மிகுந்த கவனத்துக்கு ஆளான பத்மாவத் படம் மகத்தான வசூலைக் கண்டுள்ளது. இந்தப் படம் உலகளவில் ரூ. 500 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.
இந்தியாவில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான பத்மாவத், முதல் வாரத்தில் ரூ. 167 கோடியும் அடுத்த வாரத்தில் ரூ. 69 கோடியும் மூன்றாவது வாரத்தில் ரூ. 32 கோடியும் வசூலித்துள்ளது. இந்நிலையில் நான்காவது வாரம் இந்தப் படம் ரூ. 14 கோடி வசூலித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் இந்தப் படம் முதல் நான்கு வாரத்தில் ரூ. 282 கோடி (கேளிக்கை வரி நீங்கலாக) வசூலித்துள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், கோவா, மத்தியப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியாகாத நிலையிலும் இந்த வசூல் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் வாரங்களில் இந்தியாவில் ரூ. 300 கோடி வசூலை எட்டுமா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.