கோலிவுட் பெரும்பாலும் ஹீரோவை மையப்படுத்தியே படங்களை எடுக்கும். ஹீரோயின்களைப் பொருத்தவரையில் மார்கெட் இருக்கும் வரை அவர்களைக் கொண்டாடும். அதன் பின் புது வரவுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கும். காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற கொள்கையறிந்த நடிகைகள் வெவ்வேறு மொழிகளில் நடித்து தங்களை தக்க வைத்துக் கொள்வார்கள்.
காஜல் அகர்வாலுக்கு ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சாயிஷா, அதிதி பாலன் போன்ற புது வரவு நடிகைகளால் கோலிவுட்டில் மார்கெட் பின் தங்கிவிட்டது. இந்நிலையில் அவர் டோலிவுட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.
தற்போது 'அமர் அக்பர் அந்தோணி' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் காஜல். தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் ரீமேக்தான் இந்த தெலுங்கு AAA. இந்த படத்தின் புரொட்யூசர் நஷ்டம் அடைந்தது மொத்த மீடியாவுக்கும் தெரிந்ததுதான் என்றாலும் இப்படம் தெலுங்கு படத்திற்கு ஏற்ப சில மாற்றங்களுடன் இயக்குகிறார்கள். ரவி தேஜா மூன்று வேடங்களில் நடிக்கிறார். சீனு வைத்லா இந்தப் படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் தமன்னா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கோலிவுட்டில் அதிக வாய்ப்புகள் இல்லாத நிலையிலும், தெலுங்கில் ரீ எண்ட்ரியாகவும் இருக்கும் இந்தப் படத்தில் தான் காஜலின் திரைவாழ்வு தொய்வில்லாமல் தொடருமா என்று தெரியும்.