இந்தியத் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி (54) , மாரடைப்பால் சனிக்கிழமை நள்ளிரவு துபையில் காலமானார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி 50 ஆண்டுகளைக் கடந்து இந்திய சினிமாவில் கோலோச்சினார்.
இந்தியத் திரையுலகில் தனி இடத்தைத் தக்க வைத்திருந்த ஸ்ரீதேவியின் மறைவு சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதேவிக்கு கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் உள்ளனர்.
ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. மும்பையில் ஸ்ரீதேவின் இறுதிச்சடங்குகளுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஸ்ரீதேவியின் உடல் மதியம் 4 மணிக்குள் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை சாண்டாகுரூஸ் பகுதியில் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரஜினி, லதா ரஜினிகாந்த், நடிகர் சங்கத் தலைவர் நாசர், ஹன்சிகா போன்ற கோலிவுட் பிரபலங்கள் மும்பை சென்றுள்ளார்கள். நடிகர் கமலும் ஸ்ரீதேவி இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இதற்காக இன்று மதியம் விமானம் மூலமாக மும்பை செல்லவுள்ளார்.