அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம்! ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!

இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்...
அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம்! ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி!

அரசு மரியாதையுடன் நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது.

துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மயங்கிய நிலையில் குளியல் அறைத் தொட்டியில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

சட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து, துபை சவக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவியின் உடலை அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகன் அர்ஜுன் கபூர் ஆகியோரிடம் துபை அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஒப்படைத்தனர். அதன் பின் ஸ்ரீதேவியின் உடல், 'எம்பாமிங்' எனப்படும் பதப்படுத்துதல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

'எம்பாமிங்' முடிந்ததும் துபை விமான நிலையத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு, மும்பையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் ஏற்றப்பட்டு மும்பைக்கு இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தது.

ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் உள்ள அவரது இல்லத்துக்கு அருகில் உள்ள லோகண்ட்வாலா பகுதியில் உள்ள செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை 9.30 முதல் வைக்கப்பட்டது.

ஸ்ரீதேவியின் உடலுக்குப் பிரபலங்களும் ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். சிரஞ்சீவி, ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென், ஹேமா மாலினி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். ரசிகர்களும் வரிசையில் நின்று ஸ்ரீதேவிக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

பொதுமக்கள் மற்றும் நலம் விரும்பிகளின் அஞ்சலிக்குப் பின், ஸ்ரீதேவியின் உடல் செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஸ்ரீதேவி உடலுக்கு மூர்வணக்கொடி போர்த்தப்பட்டு மஹாராஷ்டிர அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

விலே பார்லே பகுதியில் உள்ள சேவா சமாஜ் மயானத்தில் ஸ்ரீதேவியின் உடல் கொண்டுவரப்பட்டது. அனில் அம்பானி, நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சஞ்சய் தத் உள்ளிட்ட பிரபலங்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்கள். அங்கு, துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com