2017-ம் ஆண்டின் கடைசி நாளன்று வருகின்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இவருடைந்த அறிவிப்பிற்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் ஒருசேர எழுந்து வரும் நிலையில் தற்போது இயக்குநர் விசு அவர்களும் இது குறித்த விமரிசனத்தை முன் வைத்துள்ளார்.
முதலில் அதிமுக-வில் இருந்த இயக்குநர் விசு பின்னர் பாஜக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போதைய தமிழக அரசியல் சூழலைப் பற்றிய தனது கருத்துகளை அவ்வப்பது முன் வைத்துக் கொண்டும் இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு கமலின் அரசியல் வருகையைக் கடுமையாக எதிர்த்துப் பதிவிட்டிருந்த இவர், தற்போது ரஜினியின் அரசியல் வருகை குறித்தும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
“கான மயிலாட, கண்டிருந்த வான்கோழி,
தானும் அதுவாகப் பாவித்து தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடினால்?!
காட்டுல மயில் அழகா தோகையை விரிச்சு சூப்பரா dance ஆடுமாம்...
உடனே வான் கோழிக்கு அடி வயிறு எரியுமாம்
பொறாமை புடுங்கித் தின்னுமாம்...
அதுவும் அசிங்கமான உடம்பை வச்சுக்கிட்டு
கண்றாவியா தத்தக்கா பொத்தக்கான்னு dance ஆடுமாம்...
ரஜினி நீ மயில்... மற்ற உதிரி கோஷ்டிகள் வான்கோழி...
நீ ஆடு ராஜா ஆடு...
உன் இறகால் நொந்து போன தமிழ்நாட்டு மக்களின்
இருதயங்களை ஆன்மீக வருடல் வருடி இருக்கிறாய்...
நன்றி ரஜினி நன்றி...!
-இயக்குநர் விசு”
இவ்வாறு, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் ரஜினி குறிப்பிட்ட ஆன்மிக அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் விசு.