மகளிர் கிரிக்கெட்டை மையமாக வைத்து படமொன்றை இயக்கவுள்ளார் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ். கபாலி படத்தில் நெருப்புடா பாடல் மூலம் கவனம் பெற்ற அருண்ராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் இது.
இந்தப் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆர்வமாக உள்ளார். இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
அருண்ராஜா இயக்குநரானது எங்கள் நண்பர் குழுவுக்கு முக்கியமான தருணம். அதைப் பெரிதளவில் கொண்டாடவுள்ளோம். மகளிர் கிரிக்கெட் குறித்த உத்வேகமூட்டும் படம் அது. கதை விவாதத்தில் நானும் கலந்துகொண்டுள்ளேன். இந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடிக்கவும் நான் தயாராக உள்ளேன். ஆனால் அது படத்தின் கதையையும் முன்னணி கதாபாத்திரத்தின் பயணத்தையும் பாதிக்காத வரையில் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மகளிர் கிரிக்கெட் குறித்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்தக் கதையை சமீபத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைக்கு முன்பே எழுதிவிட்டதாகவும் இந்திய அணி இறுதிச்சுற்று வரை முன்னேறியதும் அதற்கு மக்கள் அளித்த ஆதரவும் தன் கதை மீதான நம்பிக்கையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றும் அருண்ராஜா கூறியுள்ளார். மேலும், இந்தக் கதை மகள் - தந்தை உறவு குறித்து ஆழமாகப் பேசும் என்கிறார். கிரிக்கெட் தெரிந்த நடிகர்கள் தேவை என்பதால் அதற்குரிய தேடலில் உள்ளார் அருண்ராஜா.