தேசிய விருது பெற்ற 'ஆரண்ய காண்டம்’ புகழ் தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது படம் 'சூப்பர் டீலக்ஸ்'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு குமாரராஜா இயக்கும் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. முதலில் அநீதிக் கதைகள் என்று தலைப்பிட்டிருந்தார்கள். ஆனால் அதற்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாமல், சூப்பர் டீலக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
முதல் முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இதில், விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் ஷில்பா என்பதும் அறிவிக்கப்பட்டு, அப்புகைப்படம், சமூக வலைத்தளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டது.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, நதியா, ஃபஹத் ஃபாசில், மிஸ்கின், சமந்தா, காயத்ரி, பகவதி போன்றோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் நதியா இப்படத்திலிருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இயக்குநர் மற்றும் படக்குழுவினரின் மீதுள்ள நம்பிக்கையால் ஆரம்பத்தில் கதையை கேட்காமல் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் நடிகை நதியா. ஆனால் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்க அவரை அழைத்தபோதுதான், அப்படத்தில் நதியா தனது கதாபாத்திரத்தைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ளார். நெகடிவ் ரோல் என்று தெரியும் ஆனால் இந்தளவுக்கு கொடூரமான வில்லியாக இருக்கும் என்று நதியா எதிர்ப்பார்த்திருக்கவில்லை. எனவே இப்படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று கூறி விலகிவிட்டாராம்.
தற்போது நதியா நடிக்கவிருந்த பாத்திரத்தில், ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருக்கிறார் என்று கூறினர் படக்குழுவினர். நதியாவை விட ரம்யா கிருஷ்ணன் இந்தப் பாத்திரத்துக்கு உகந்தவராக இருப்பார், அவர் 'நீலாம்பரி’யாக உருமாறி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை மிரட்டியது மறக்க முடியாத திரை அனுபவம். திரையில் வெகுநாள் கழித்து அத்தகைய பவர்ஃபுல் நெகடிவ் வில்லியை எதிர்பார்த்துவந்த ரசிகர்கள் அதனை மீண்டும் ரம்யா கிருஷ்ணனே நிறைவு செய்யப் போவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் அப்படத்தின் டீஸர் வெளியாகி பரபரப்பையும் படத்துக்கான எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துவிட்டது. அந்த மிரட்டலான டீஸரில் சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.. கையில் கத்தியுடன் ஒருவர் கழுத்தில் வெட்ட ஒத்திகை பார்க்கும் காட்சி இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. தற்போது ரம்யா கிருஷ்ணனும் இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவலால் படம் வேற லெவல் என்ற பேச்சு நெட்டிசன்களிடையே உலவி வருகிறது.