அனேகரின் வாழ்க்கையில் சினிமா ஒரு முக்கியமான ஒரு பொழுதுபோக்கு அம்சமாக விளங்குகிறது. திரையில் தோன்றும் நடிகர்கள் தங்களது அயராத உழைப்பாலும், திறமையாலும், வசீகரத்தாலும் சினிமாவில் தங்களது பங்களிப்பை அளித்து வருகிறார்கள். சில நடிகர்கள் தோற்றப் பொலிவுடன் இருப்பார்கள், சிலர் சிறந்த நடிப்பாற்றல் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை ஏற்று அவர்களை ரசிப்பதால்தான் தொடர்ந்து மக்கள் மனத்தில் நிலைத்துள்ளார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பான தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடிகர் சூர்யாவின் உயரத்தை கேலி செய்து இரண்டு தொகுப்பாளினிகள் பேசியது சூர்யாவின் ரசிகர்கள் மனத்தை காயப்படுத்தியுள்ளது. ஊடகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சியொன்றில் இது போன்ற பேச்சுக்கள் அநாகரிகம் என்பது கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
சிங்கம் படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா நடித்தபோது சூர்யாவை விட அனுஷ்கா உயரமாக இருந்ததால் சூர்யா ஹீல்ஸ் டைப் ஷூ அணிந்து நடித்ததாகவும், அவருடைய அடுத்த படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிக்கும் போது ஒரு ஸ்டூல் வைத்துதான் சூர்யா நடிக்க வேண்டும், அல்லது இருவரையும் படம் முழுவதும் உட்கார வைத்தே எடுத்துவிட்டால் பிரச்னை இருக்காது என்றும் கிண்டலாகக் கூறியிருக்கிறார்கள்.
சூர்யாவின் ரசிகர்கள் இதனை வன்மையாக கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துவருகிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு கண்டனங்கள் வலுத்து கொண்டே வரும் நிலையில், நடிகர் சங்க செயலாளர் விஷாலும் தனது ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதே டிவீட்டில் கருத்து கூறிய ட்ரீம்ஸ் வாரியர் நிறுவனத்தின் படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, 'அங்க யாருக்கும் மூளை வளர்ச்சியப் பத்தியெல்லாம் அக்கறை இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு ஒரு விஜய் ரசிகர் 'தம்பி பிரபு நீ கிழம்பு! அருவி போல தரமான படத்தில தளபதி பத்தி தப்பா பேசின ஆளு நீ, நீ எல்லாம் பஞ்சாயத்து பேசலாமா? என்று பதிவு செய்தார்
அதற்கு ரிடிவீட் செய்த எஸ்.ஆர்.பிரபு, 'உனக்கு பதில் சொன்னா டேமேஜ் உனக்கில்ல...நான் திரு.விஜய் அவர்களை மதிக்கிறேன். அதனால... மூடிட்டு போ!! என்று பதிவிட்டுள்ளார்.