உயரத்தை வைத்து கேலி செய்த தொகுப்பாளினிகளுக்கு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக உங்கள் நேரத்தைப் பயனுள்ள செயல்களுக்குச் செலவிடுங்கள் என்று நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சன் மியூசிக்கில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் இரு தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தைக் கேலி செய்தது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. இதைக் கண்டித்து சூர்யாவின் வாசகர்கள் சமூகவலைத்தளங்களில் அத்தொகுப்பாளினிகளை விமரிசனம் செய்துவருகிறார்கள். சன் டிவி அலுவலகம் முன்பும் சூர்யாவின் ரசிகர்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். இதையடுத்து சூர்யா, அறிக்கை ஒன்றைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: அன்பான ரசிகர்களுக்கு, தரம் தாழ்ந்த விமரிசனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துக்கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற என்று கூறியுள்ளார்.