சென்னை: எழுத்தாளர் பாரதிநாதனின் 'தறியுடன்' நாவலை மையமாக வைத்து 'சங்கத் தலைவன்' என்னும் பெயரில் தனது அடுத்த படத்தினை இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்க உள்ளார்.
ஜவுளித்துறையை சார்ந்திருக்கும் கைத்தறி தொழிலாளர்களின் வாழ்வியல் அவலங்களை மையமாக வைத்து, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக 'தறியுடன்' என்ற புதிய நாவல் வெளியானது. எழுத்தாளர் பாரதிநாதன் இந்நாவலை எழுதியிருந்தார்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்நாவலானது நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஒருங்கே பெற்ற ஒரு படைப்பாகத் திகழ்ந்தது.
இந்நிலையில் தற்பொழுது இந்த நாவலை மையமாக வைத்து 'சங்கத் தலைவன்' என்னும் படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிமாறன் இப்புதிய படத்தை இயக்குகிறார்.
மணிமாறன் இதற்கு முன்னதாக 'உதயம் NH4', 'புகழ்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிமாறனின் 'கிராஸ்ரூட் பிலிம் நிறுவனம்' தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 22-ம் தேதி தொடங்குகிறது.
இப்படத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், வி.ஜே.ரம்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளித்துறையை மையப்படுத்தியதாக இப்படத்தின் கதைக்களன் அமையவுள்ளது.