நடிகை சாவித்ரியைப் போல் படக்குழுவினருக்குத் தங்கக் காசுகளைப் பரிசளித்தாரா கீர்த்தி சுரேஷ்?

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், பத்திரிகையாளராக சமந்தாவும் நடிக்கின்றனர்.
நடிகை சாவித்ரியைப் போல் படக்குழுவினருக்குத் தங்கக் காசுகளைப் பரிசளித்தாரா கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ் கோலிவுட்டில் தனி முத்திரை பதித்த நிலையில் டோலிவுட்டிலும் முன்னணி நடிகையில் ஒருவராக வளர்ந்து வருகிறார். தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான நேனு ஷைலஜா என்ற படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

அண்மையில், நடிகர் பவண் கல்யாணுடன் நடித்த அஞ்ஞாதவாசி திரைப்படம் மற்றும் சூர்யாவுடன் நடித்த கேங் திரைப்படமும் அவருக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளன. இந்நிலையில் மகாநடி எனும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படமும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. 

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறுதான் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. ‘வைஜெயந்தி மூவீஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஸ்வப்ன சினிமா’ நிறுவனம் தயாரிக்கும் இதனை 'எவடே சுப்ரமணியன்’ படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் நாக் அஷ்வின் இயக்குகிறார். 

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், பத்திரிகையாளராக சமந்தாவும் நடிக்கின்றனர். ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தாவுக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். விஜயா வாகினி அதிபர் சக்ரபாணியாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.

நடிகையர் திலகம் சாவித்திரியாக நடிப்பதைப் பற்றி கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியது, 'நடிகையர் திலகம் சாவித்திரியைப் போல நடிப்பது மிகவும் கடினம்தான். இந்தப் படத்தில் நடிக்க அவருடைய படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்தேன்.

அவருடைய மிகையற்ற நடிப்பும் உடல்மொழியும் பிரமிக்கத்தக்கவை. நடிகையர் திலகமாக நடித்தது என் நடிப்பு வாழ்க்கையைப் பொருத்தவரையில் மறக்க முடியாத அனுபவம். அவரைப் போல நடித்திருக்கிறேனா என்பதை நான் சொல்லக் கூடாது. படம் பார்த்து ரசிகர்கள்தான் தீர்ப்பளிக்க வேண்டும்’ என்று சிலாகித்துக் கூறினார். 

சாவித்திரியின் கதாபாத்திரத்தில் மனம் ஒன்றி நடித்த கீர்த்தி சுரேஷுக்கு அவருடைய குணநலன்கள் மீதும் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. நடிகை சாவித்திரி போலவே சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு காரியம் செய்திருக்கிறார். சாவித்திரி தன்னுடன் நடித்தவர்களுக்கு தங்கக் காசுகள் பரிசளிப்பாராம். போலவே கீர்த்தி சுரேஷ் தற்போது மகாநடி படக்குழுவினருக்கு தங்கக் காசுகள் பரிசளித்து மகிழ்ந்துள்ளார். 

கடந்த எட்டு மாதங்களாக சாவித்திரியின் கதாபாத்திரத்தில் இரு மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் அவரது நல்லியல்புகளால் பெரிதும் கவரப்பட்டுள்ளார்.

ஒரு காலத்தில் படப்பிடிப்பு தளத்தில் கதாநாயகிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவைக் கூட மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்களாம். ஆனால் சாவித்திரி அனைவரிடமும் அன்பாகவும் சகஜமாகவும் பழகக் கூடியவர். தாராள மனம் கொண்டவர். தன்னுடன் நடிக்கும் சக கலைஞர்களுக்கு ஏதேனும் நினைவுப் பரிசை அளிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

தற்போது சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் அப்பழக்கம் தனக்கும் பிடித்திருக்கிறது என்று கூறு அதைத் தொடர்ந்திருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியான விஷயம். எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு! நல்ல விஷயங்களை யார் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போற்றுதலுக்குரியவர்களே என்பது உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com