ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.
கடந்த தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 2.0 படம், அடுத்ததாக ஜனவரி 25 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என ரஜினி அறிவித்தார். ஆனால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்த வருட தீபாவளிக்கும் வெளியாகாத நிலையில் விஜய்யின் சர்கார், சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்கள் தீபாவளியன்று வெளியாகவுள்ளன.
இந்நிலையில் 2.0 படத்தின் வெளியீட்டுத் தேதி திடீரென நேற்று அறிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் 29 அன்று, அதாவது தீபாவளிக்குப் பிறகு 2.0 படம் வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் தகவல் அளித்தது. மேலும் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து ட்வீட் செய்த இயக்குநர் ஷங்கர், ஒருவழியாக, விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் குறித்த தேதிக்குள் முடித்துத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள். படம் நவம்பர் 29 அன்று வெளியாகும் என்று அறிவித்தார்.