தமிழகத்தை மையம் கொண்ட ஸ்ரீரெட்டி புயலின் பகீர் பச்சைக் குற்றச்சாட்டுகள்!

அதுமட்டுமல்ல, ஸ்ரீரெட்டி பச்சையாக வெளியிட்ட குற்றச்சாட்டுகள் சிலவற்றை அப்படியே வெளியிட முடியாத காரணத்தால் காணொளி இணைத்திருக்கிறோம்.
தமிழகத்தை மையம் கொண்ட ஸ்ரீரெட்டி புயலின் பகீர் பச்சைக் குற்றச்சாட்டுகள்!

டோலிவுட்டை மொத்தமாகத் தொங்கலில் விட்டு கல்லால் அடிக்காத குறையாக காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கும் சர்வதேச ‘காஸ்டிங் கெளச்’ போராளி ஸ்ரீரெட்டி (இப்படிச் சொல்வதில் ஸ்ரீரெட்டிக்கு ஆட்சேபணை இருக்காதென்று நினைக்கிறோம்) சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரை சன் மியூசிக் புகழ் ஆடம்ஸ் நேரில் சந்தித்து கண்ட நேர்காணலொன்று யூ டியூபில் காணக் கிடைக்கிறது. அதில் ஸ்ரீரெட்டி நடன இயக்குனர், நடிகர் கம் இயக்குனரான ராகவ லாரன்ஸ் குறித்தும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் குறித்தும் மிக வெளிப்படையாக சில குற்றச்சாட்டுகளை நாக்கைப் பிடிங்கிக் கொள்வது போலக் கேட்டிருக்கிறார்.

இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா? என்ற  ஆடம்ஸின் கேள்விக்கு; 

‘என்னிடம் எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது. தெலுங்கானாவில் அந்த ஆதாரங்களை எல்லாம் பொது வெளியில் அளித்தும் கூட எங்களது அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்கள் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இங்கே மட்டும் ஆதாரங்களை வைத்துக் கொண்டு என்ன செய்து விடப் போகிறார்கள். என்று கூறியவர்... திரையில் நேரடியாக ராகவா லாரன்ஸிடம் பேசும் விதமாக,  

‘லாரன்ஸ் மாஸ்டர், உங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி நான் பப்ளிஸிட்டி தேடிக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. இன்றைய தேதிக்கு என்னை சர்வதேச அளவில் இந்தியர்கள் அனைவருக்கும் தெரியும். நியூயார்க் டைம்ஸில் எனது போராட்டம் பதிவாகியிருக்கிறது. வேண்டுமானால் அங்கிருக்கும் மக்கள் என் மூலமாக இனி உங்களையும் தெரிந்து கொள்வார்கள். அதனால் பப்ளிஸிட்டி பற்றியெல்லாம் வாயைத் திறந்தீர்கள் எனில் நான் உங்களால் பாதிக்கப்பட்ட எனது தோழியையும் அழைக்க வேண்டியதாக இருக்கும். அன்று என்ன நடந்தது என்று உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். நீங்கள் பெரிதாக நம்புகிறீர்களே அந்த ராகவேந்திர சுவாமிக்கும் தெரியும். நீங்களோ, நானோ இதை மறந்தாலும் கடவுள் இதை மறக்க மாட்டார். இதற்கான தண்டனையை அவர் நிச்சயமாக உங்களுக்குத் தருவார். உண்மையில் நான் கூட நீங்கள் நல்லவர் என்று தான் உங்களைச் சந்திக்கும் முன்பு வரை கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அதெல்லாம் வெளி உலகத்துக்காக நீங்கள் மாட்டிக் கொண்ட முகமூடி. உங்களது உண்மை நிறம் அதுவல்ல என்று எனக்குத் தெரிய வந்த போது அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனாலும், என் கேரியரில் நான் முன்னேற வேண்டும் என்பதற்காக அதை நான் அனுமதித்தேன். ஆனால், நீங்கள் எனக்கு அன்று கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. ஆகவே, அதை வெளியில் சொல்வதால், எனக்கு ஏற்பட்டதைப் போன்ற பாதிப்பும், ஏமாற்றமும் இனி நடிக்க வாய்ப்புக் கேட்டு வரும் பெண்களுக்கு ஏற்படக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வை தூண்டத் தான் நான் உண்மைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எல்லாத் துறைகளிலும் தான் இருக்கின்றன. ஆனால், சினிமாத்துறையில் அது மிக அதிகம். உலகின் வேறு எந்தத் துறையிலும் இல்லாத அளவில் இத்துறையில் பெண்கள் மிக மோசமாக சீரழிக்கப் படுகிறார்கள். அதோடு அவர்களைப் பயன்படுத்திக் கொண்டவர்களால் மிக மோசமான வகையில் எந்தவிதப் பலனும் இன்றி ஏமாற்றவும் படுகிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்பதால் என் எதிர்காலம் குறித்துக் கூட கவலைப் படாமல் நான் இந்தப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறேன். சினிமாத்துறையில் பெண்களுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லைகள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வரவேண்டும். இனி அதுமாதிரியான குற்றங்கள் குறைய வேண்டும் என்பது தான் என் நோக்கமே தவிர உங்கள் பெயரை வெளியில் சொல்வதால் எனக்குப் பெரிதாக என்ன கிடைத்து விடப் போகிறது. தேவையில்லாமல் என் மீது சேற்றை வாறி இறைத்தீர்கள் என்றால் நானும் பதிலுக்கு வாரி இறைக்கத் தொடங்கி விடுவேன். அப்புறம் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.’ 

என்று காட்டமாகப் பதில் அளித்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ஸ்ரீரெட்டி பச்சையாக வெளியிட்ட குற்றச்சாட்டுகள் சிலவற்றை அப்படியே வெளியிட முடியாத காரணத்தால் காணொளி இணைத்திருக்கிறோம்.

அதில் ஸ்ரீ ரெட்டியின் அப்பட்டமான குற்றச்சாட்டுகளை காது குளிரக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவர்கள். அப்படியும் தெரிந்து கொள்ளலாம். கேட்டு என்ன செய்ய? இவரென்ன பத்தினியா? இல்லை இவர் குற்றம் சுமத்தும் நபர்கள் எல்லாம் உத்தமர்களா? என்ற ரீதியிலான கமெண்டுகளைப் பற்றிச் சொல்வதற்கு எதுவுமில்லை. 

ஒரு நடிகை... தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் பேசுவதாக இந்தக் குற்றச்சாட்டுகளை கருத முடியவில்லை. ஏனெனில், அவர் குற்றம் சுமத்தியிருக்கும் நபர்கள் இந்த சமூகத்தில் தாங்கள் மரியாதைக்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும் என்ற நினைப்பில் அங்கே ஒரு முகமும், இங்கே ஒரு முகமும் காட்டிக் கொண்டு பட வாய்ப்புக் கேட்டுத் தங்களை அணுகும் இளம்பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி இருக்கிறார்கள் என்ற உண்மை ஸ்ரீரெட்டியின் பேச்சில் தெறிக்கிறது.  அந்த உண்மையை அவர் இப்படி வெளியில் சொல்வதால் வாய்ப்புத் தேடி கோலிவுட், டோலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும் திறமை மிகுந்த இளம்பெண்கள் பலர் இனி இது போன்ற ஏமாற்றுவாதிகளிடம் சிக்கி தங்கள் மானத்தை இழக்காமல் இருந்தால் சரி.

Video courtesy: PRIME VIDEOS.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com