அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த வருடம் வெளியான டாய்லெட் ஏக் பிரேம் கதா (Toilet Ek Prem Katha) படத்தை ஸ்ரீ நாராயண் சிங் இயங்கியுள்ளார். இப்படத்தில் பூமி பெட்னேகர், அனுபம் கெர் போன்றோர் நடித்துள்ளார்கள்.
தூய்மை இந்தியா என்கிற ஸ்வ்ச் பாரத் திட்டம் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 2019-க்குள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை இல்லாத சுகாதாரமான சமூகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேச மேம்பாட்டுக்கும், வீணாகும் குப்பைகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும்.
இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த பிரதமர் மோடி கூறியதாவது: தூய்மை குறித்த கூடுதல் விழிப்புணர்வை அக்ஷர் குமாரின் படம் ஏற்படுத்துகிறது. தூய்மை இந்தியா திட்டத்துக்காக இந்தியாவிலுள்ள 125 கோடி மக்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். இதனால் இந்தப் படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைத்தது.
முதல் மூன்று நாள்களில் இந்தியாவில் ரூ. 51கோடி வசூலித்தது, டாய்லெட் ஏக் பிரேம் கதா. இந்நிலையில், இந்தப் படம் வெளியான முதல் 8 நாள்களில் ரூ. 100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்தது. ரூ. 18 கோடியில் உருவான இந்தப் படம் ரூ. 130 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனைகளைப் படைத்ததால் தற்போது சீனாவிலும் வெளியாகவுள்ளது.
ஜூன் 8-ம் தேதி டாய்லெட் ஹீரோ என்கிற பெயரில் சீனாவில் வெளியாகவுள்ளது. சமீபகாலமாக ஹிந்திப் படங்கள் சீனாவில் நல்ல வசூலைப் பெறுவதால் இந்தப் படமும் இந்தியாவில் வசூலித்ததுபோல சீனாவிலும் வசூலில் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.