காலா படத்தின் முதல் பார்வை போஸ்டரில் ரஜினி ஜீப் மீது அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியானது. இதைக் கண்ட மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் கூறியதாவது: ரஜினி ஒரு நடிகர் காரை சிம்மாசனம் போல பயன்படுத்தும்போது அந்த காரும் வரலாற்றுச் சின்னமாகிவிடுகிறது. ரஜினி அமர்ந்துள்ள காரை எங்கள் நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் வைக்க விருப்பப்படுகிறேன். இதுபற்றி அறிந்தவர்கள் உதவவும் என்று தெரிவித்தார்.
காலா படத் தயாரிப்பாளர் தனுஷ் ட்விட்டரில் இதற்குப் பதில் அளித்தார். ரஜினி அமர்ந்துள்ள அந்த வண்டி தற்போது படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு முடிந்தபிறகு அதை உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன் என்று கூறினார். மேலும் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த ஆனந்த் மகேந்திரா, அருங்காட்சியகம் மும்பையில் திறக்கப்படவுள்ளது. மக்கள் அதைப்
பார்வையிடலாம் என்றும் கூறினார்.
காலா படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ஆனந்த் மகேந்திரா கோரிய ஜீப்பை வழங்கியுள்ளார் காலா படத்தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ். தான் கோரிய ஜீப்பை தனுஷ் தனக்கு வழங்கிவிட்டதாகவும் சென்னையில் உள்ள மகேந்திரா அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார் ஆனந்த் மகேந்திரா. மேலும் அந்த ஜீப்பின் மீதேறி தன்னுடைய நிறுவன ஊழியர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, பொதுமக்கள் இந்த ஜீப்பைப் பார்வையிடவும் அதன் மீதேறி புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் முடியுமா என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு, சுவாரசியமான யோசனை, இதற்குப் பலரும் விருப்பம் தெரிவிப்பார்களா என்றும் ஆனந்த் மகேந்திரா கேள்வியெழுப்பியுள்ளார்.