ரஜினி நடித்துள்ள காலா படம் கர்நாடகாவில் வெளியாக கர்நாடக முதல்வர் உதவ வேண்டும் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
காலா படப் பிரச்னையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு திரைத்துறைக்கே ஆரோக்கியமான ஒன்று. திரைப்படம் என்பது கலை வடிவம். சினிமா வேறு. அரசியல் வேறு. இரண்டையும் தொடர்புபடுத்தக் கூடாது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறது கர்நாடக உயர் நீதிமன்றம்.
பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் பாலம்தான் சினிமா. அப்படி இயங்கி வரும் சினிமா துறையின் மீது அரசியல் சாயம் பூசுவது நியாயமற்றது. ஒரு திரைப்படம் வெளியாவதில் அரசியல் புகக்கூடாது. இந்தத் தீர்ப்பு அனைத்து திரைத்துறையினரும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. இதன் மூலம் இரு மாநில மக்களுமே மகிழ்ச்சி அடைவார்கள்.
கர்நாடகாவில் முதல்வராகப் பதவியேற்றுள்ள மாண்புமிகு முதல்வர் திரு. குமாரசாமி அவர்களுக்கு வணக்கத்துடன், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். காலா திரைப்படத்திற்குத் தொடர்ந்து வரும் பிரச்னைகளுக்கு ஒரு முற்றுபுள்ளி வைப்பீர்கள் என்று எங்களுக்கு அபார நம்பிக்கை உள்ளது. கர்நாடக அரசு காலா திரைப்படம் வெளியாவதை உறுதி செய்வதோடு படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கும் காண வரும் ரசிகர்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் என்று நம்புகிறோம். இதனை ஒரு கோரிக்கையாகவே கர்நாடக அரசிடம் வைக்கிறோம். மாண்புமிகு முதலமைச்சர் தாங்கள் எடுக்கும் சுமூகமான முடிவினால் இரு மாநில பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வாக அமையும். இரு மாநிலத்திற்கும் நட்புக்கும் இது எதிர்காலப் பயனை அளிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.