அனுஷ்கா & விராட் கோலியின் ‘தூய்மை இந்தியா’ பப்ளிசிட்டி ஸ்டண்டுக்கு நானா பலியாடு! அர்ஹன் சிங்கின் பதிலடி!

பார்த்தீர்களா இந்த மனிதர்களை? ஆடம்பரக் காரில் பயணிக்கிறார்கள், ஆனால் மூளையை எங்கோ வீசி எறிந்து விட்டு வந்து விட்டார்கள் போல, அதனால் தான் நடுச்சாலையில் குப்பையை வீசி விட்டுச் செல்கிறார்கள்.
அனுஷ்கா & விராட் கோலியின் ‘தூய்மை இந்தியா’ பப்ளிசிட்டி ஸ்டண்டுக்கு நானா பலியாடு! அர்ஹன் சிங்கின் பதிலடி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் சாலையில் தன்னைக் கடந்து சென்ற காரில் இருந்த ஒரு மனிதர் போகிற போக்கில் குப்பையை வீசி விட்டுச் சென்றதைக் கண்டார். கண்டவர் மற்ற எல்லோரையும் போல சும்மா வேடிக்கை பார்த்து கொண்டு அப்படியே நகராமல், மெனக்கெட்டு தனது காரை நிறுத்தி, குப்பையை சாலை வழியில் வீசியெறிந்த மனிதரிடம் அவரது செயலைக் கண்டிக்கும் விதத்தில்  ‘ஏன் இப்படி சாலையில் பிளாஸ்டிக் குப்பையை எறிந்து விட்டுப் போகிறீர்கள்? இப்படியெல்லாம் சாலையில் குப்பையை வீசி விட்டு போய்விட முடியாது, குப்பைகளைக் கொட்ட குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்துங்கள்’ என்று எச்சரித்து விட்டுச் சென்றார். அனுஷ்காவின் இந்தச் செய்கையை அவரது கணவர் விராட் கோலி ஆதரித்ததோடு காணொளியாகப் பதிவு செய்து கீழ்கண்ட வாக்கியங்களுடன் இணையத்திலும் வெளியிட்டார்.

‘பார்த்தீர்களா இந்த மனிதர்களை? ஆடம்பரக் காரில் பயணிக்கிறார்கள், ஆனால் மூளையை எங்கோ வீசி எறிந்து விட்டு வந்து விட்டார்கள் போல, அதனால் தான் நடுச்சாலையில் குப்பையை வீசி விட்டுச் செல்கிறார்கள். இவர்களா சுத்தமான இந்தியாவை உருவாக்கி விடப்போகிறார்கள்? இப்படிப் பட்டவர்களைக் கண்டால் இனிமேல் சும்மா இருக்காதீர்கள், நீங்களும் அனுஷ்கா போலவே கண்டனம் எழுப்புங்கள்.’  என்று விராட் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக இந்த காணொளி இணையத்தில் வைரலாகப் பரவி வருவதோடு அனுஷ்கா ஷர்மாவின் சமூக அக்கறையுடன் கூடிய இச்செயலுக்குக் கணிசமான ஆதரவையும் பெற்றுத்தந்துள்ளது.

ஆனால் இவ்விஷயத்தை வேறொரு கோணத்தில் காணும் இன்னும் சிலர், அனுஷ்கா மிரட்டும் விதத்தில் அவரைக் கண்டிக்காமல், சும்மா சொல்லியிருந்தாலும் கூட அவர் தனது தவறை உணர்ந்திருப்பாரே என்ற ரீதியில் கமெண்ட் இட்டிருந்தார்கள்.

சாலையில் குப்பையை வீசி அனுஷ்காவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட அந்த நபரும் ஒரு நடிகர் தான். அவரது பெயர் அர்ஹன் சிங். 1990 ல் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமானவர். ஷாருக்கானுடன் ‘இங்லீஷ் பாபு தேசி மேம்’, தூர்தர்ஷனில் ‘தேக் பாய் தேக்’ எனும் நெடுந்தொடர்,  மாதுரி தீக்‌ஷித்துடன் ‘ராஜா’ இந்திப்படம் என சில திரைப்படங்களில் நடித்துள்ளார். விராட் கோலியின் வீடியோ பகிர்வுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அர்ஹன் சிங் கூறியிருப்பது;

‘சாலையில் குப்பையை வீசுவது தவறு தான். அதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அதை அனுஷ்கா ஏதோ பள்ளி பிரின்ஸிபலாக தன்னை நினைத்துக் கொண்டு மிரட்டும் விதத்தில் கண்டித்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம், ஆனால், அவரது மதிப்புக்குரிய கணவர் விராட் அதை விடியோ பதிவாக்கி நான் மிகப்பெரிய குற்றத்தைச் செய்து விட்டதைப் போல கமெண்ட் செய்திருப்பது வேதனையாக இருக்கிறது. கண்டிப்பதற்கும் ஒரு முறை இருக்கிறது. முன் பின் அறியாதவர்களிடம் மெதுவாகச் சொன்னாலே கேட்டுக் கொள்வார்களாயிருக்கும். அதைப்போய் தங்களுக்கான விளம்பரமாகப் பயன்படுத்திக் கொண்டு ஆதாயம் தேடப் பார்க்கிறது இந்த ஹை ப்ரொஃபைல் செலிபிரிட்டி ஜோடி. என்று தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com