பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசக்கூடாது என்றொரு சட்டம் போட்டியாளர்களுக்கு விதிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பேசினால் நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களுக்குப் புரியாது என்பதால் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. கடந்த வருட நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசியதால் போட்டியாளர்களுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்குப் புதிய விதி ஒன்று அறிமுகமானது.
வெளிமாநிலங்களைச் சேர்ந்த நடிகைகளான யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் அடிக்கடி ஹிந்தியில் பேசிக்கொள்வதால் இந்த வார அணித் தலைவர் ஜனனி மூலமாக ஓர் கட்டளை விதிக்கப்பட்டது. போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் ஒரு தருணத்தில் அதைத் தெரியப்படுத்தினார் ஜனனி. அதாவது, இனிமேல் பிக் பாஸ் வீட்டில் யாரும் ஹிந்தியில் பேசக்கூடாது என்று பிக் பாஸ் நிர்வாகம் வழங்கிய கட்டளையை போட்டியாளர்களுக்கு அவர் தெரியப்படுத்தினார்.
இதையடுத்து தமிழைத் தவிர்த்து ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஹிந்தி உள்ளிட்ட வேறு மொழிகளிலும் பேசுவதற்கு பிக் பாஸ் வீட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழில் உரையாடும்போது அதிகமாக ஆங்கில வார்த்தைகளைக் கலந்து பேசினால் பிக் பாஸ் நிர்வாகம் எவ்விதக் குறுக்கீடும் செய்வதில்லை.