காலாவிற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்றும், அதன் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த செய்திதான்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்ட ஷெட்யூல் 40 நாட்கள் நடைபெறும். காலாவுக்குப் பிறகு அரசியல் படங்களுக்கு ப்ரேக் கொடுத்திருக்கும் ரஜினி, இந்தப் படத்தில் ரசிகர்கள் விருப்பத்துக்கு இணங்க முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஸ்டைலிஷ் கெட்டப்பில் காணப்படுவார்.
அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் இப்படத்தில் இடம்பெறவிருப்பதால், பீட்டர் ஹெய்ன் இதில் ஸ்டண்ட் மாஸ்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட் என தென்னிந்திய திரையுலகில் ரவுண்ட் கட்டிக் கொண்டிருக்கும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன். ஹீரோக்கள் பறந்து பறந்து ஸ்பைடர் மேன் போலச் சண்டை போடுவது இவரது தந்திர யுக்திகளால்தான். மரண மாஸ் பரபரப்பு சண்டைக் காட்சிகள் இவரது ட்ரேட் மார்க். அண்மையில் தமிழ்ப்படங்களில் பங்கேற்கவில்லை. அதற்கு பெப்ஸிக்கும் அவருக்கும் நடந்த ஒரு பிரச்னைதான் காரணம். தற்போது ஐதராபாத்தில் உள்ள பீட்டரை ரஜினி படத்திற்காக அழைத்திருக்கிறார்கள்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டாருடன் சிவாஜி, எந்திரன், கோச்சடையான் ஆகிய படங்களில் பீட்டர் ஹெய்ன் பணி புரிந்திருக்கிறார். தற்போது நான்காவது முறையாக ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார். ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதிக ரிஸ்க் எடுக்கும்விதமான ஸ்டண்ட்டுகளைத் தவிர்த்துவிடும்படி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பீட்டர் ஹெய்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.