மாரி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக நடிகர் தனுஷ் மாரி இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்குகிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் ஆட்டோ டிரைவராக இருக்கலாம். வரலெட்சுமி சரத்குமார் கலெக்டராக நடிக்கிறார். பசங்க 2, சைவம் முதலிய படங்களில் நடித்துள்ள வித்யா பிரதீப் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தனுஷுக்கு வில்லனாக நடிக்கிறார்.
அண்மையில் மாரி 2 படப்பிடிப்பில் தனுஷ் டொவினோ தாமஸுடன் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்ப்பாராத விதத்தில் தனுஷ் தடுமாறி கீழே விழுந்ததால், அவரது வலது கால் முட்டி மற்றும் இடது கையிலும் காயங்கள் ஏற்பட்டன. படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்த பின், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தனுஷுக்கு ஏற்பட்ட காயம் பற்றிய செய்தியறிந்த ரஜினி குடும்பத்தினர் தனுஷை நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். ரஜினி தற்போது டேராடூனில் படப்பிடிப்பில் இருப்பதால் ஃபோனில் தனுஷுடன் பேசினார். காயம் முழுவதும் குணமடைந்த பின் தனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
தனுஷ் விரைவில் நலம் அடைந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம் என அவரது ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.