நவம்பர் 10.
இந்த நாளில் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனும் ரன்வீர் சிங்கும் திருமணம் செய்யவுள்ளதாகப் பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
திருமணம் இத்தாலியில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. பெங்களூரில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாலத்தீவில் ஜனவரி மாதம் இதுகுறித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் தற்போது திருமணத்துக்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
2013-ல் சஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். அதிலிருந்து இருவரைப் பற்றியும் கிசுகிசுக்கள் பரவ ஆரம்பித்தன. சமீபத்தில் இன்ஸ்டகிராமில் தன்னுடைய புகைப்படத்தைப் பகிர்ந்தார். ரன்வீர். அதற்கு தீபிகா அளித்த பதில் - என்னுடையது.
இருவரும் தங்கள் காதல், திருமணம் பற்றி வெளிப்படையாகப் பேசாத நிலையில் தீபிகா படுகோனின் இந்த ஒற்றை வார்த்தை அனைத்துக்குமான பதிலாக அமைந்துவிட்டது. இந்நிலையில் நவம்பர் 10 அன்று இத்தாலியில் திருமணம் நடைபெறவுள்ளதாக மும்பை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
இச்செய்தியை இரு தரப்பும் இதுவரை மறுக்கவில்லை.