ரூ. 400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வசனம் - ஜெயமோகன். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா-வும், முத்துராஜ் கலை இயக்குநராகவும், படத்தொகுப்பாளராக ஆண்டனியும், ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றியுள்ளார்கள். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளதால், இத்திரைப்படம் இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டீஸர் இணைய தளங்களில் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட காலா திரைப்படத்தின் டீஸரும் இதே போல, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக இணையத்தில் வெளியானது. இப்படி தொடர்ந்து படங்களின் டீஸர்களை அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக இணையத்தில் லீக் செய்வது முறையல்ல. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
டீஸர் லீக்கானதற்கு நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா தனது ட்விட்டரில் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதில் அதிகாரபூர்வமாக 2.0 படத்தின் டீஸர் வெளியிடப்படும் முன் இணையத்தில் வெளியிடப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாது. படக்குழுவினரின் கடின உழைப்பு, முயற்சி ஆகியவை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது மனசாட்சியற்ற செயல்’ என்று பதிவு செய்துள்ளார்.