சென்னை: நவரச நாயகன் கார்த்திக்குடன் நடிகர் கார்த்தி புதிய படமொன்றில் இணைந்து நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி தற்பொழுது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டிச் சிங்கம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு நவரச நாயகன் கார்த்திக்குடன் நடிகர் கார்த்தி புதிய படமொன்றில் இணைந்து நடிக்க உள்ள தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது. நாயகியாக கார்த்தியம், ரகுல் பிரீத் சிங் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். கார்த்தியும் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது கவனிக்கத்தக்கது.
இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், சரவணன், ஆர்.கண்ணன் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ரஜத் ரவிசங்கர் இப்படத்தினை இயக்குகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 8-ம் தேதி சென்னையில் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.