மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காக கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (54). இவர் திருச்சி காந்தி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் அனிதா. இவருக்கு 4 அண்ணன்கள் உள்ளனர். பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும்.
நீட் தேர்வால் மருத்துவராக முடியவில்லையே என விரக்தியில் இருந்த அனிதா, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனிதாவின் வாழ்க்கையை விவரிக்கும் படத்தில் கதாநாயகியாக, ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகியவற்றின் மூலமாக புகழடைந்த ஜூலி நடிக்கவுள்ளார். Dr.S. அனிதா MBBS என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. உத்தமி என்கிற படத்தில் நடித்து வரும் ஜூலி கதாநாயகியாக நடிக்கும் 2-வது படமிது.
Dr.S. அனிதா MBBS படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜூலி நடிப்பது தவிர முக்கிய விவரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இந்நிலையில் Dr.S. அனிதா MBBS பட போஸ்டரைப் பகிர்ந்து நடிகை கஸ்தூரி ட்வீட் செய்ததாவது:
அந்த
பிஞ்சு தேவதையின் எஞ்சிய நினைவுகளை
மதிக்காவிடினும்
மிதிக்காமல் இருங்கள்!
அரசியலிலும் அரங்கத்திலும்
அனிதாவின் ஆன்மாவை
இழுக்காமல் இருங்கள்!
என்று கஸ்தூரி கூறியுள்ளார்.