திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி, துபையில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்தபோது, பிப்ரவரி 24-ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்பதால், அதில் மர்மம் இருப்பதாகப் பரபரப்பாக பேசப்பட்டது. அதனால், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, தனி விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தற்போது ஸ்ரீதேவிக்கு இரங்கல் கூட்டங்களை அவரது கணவர் போனி கபூர் வெவ்வேறு ஊர்களில் ஒருங்கிணைத்து வருகிறார். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலான க்ரெளன் ப்ளாஸாவில் இன்று மாலை 6 மணியளவில் இந்த இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர், ஸ்ரீதேவியின் தங்கை லதா அவரது கணவர் சஞ்சய் ராமசாமி, அய்யப்பன் குடும்பத்தினர், ஸ்ரீதேவியின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர்.