பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கியுள்ள படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் நடித்து வருகிறார். திரையுலகில் துருவ் அறிமுகமாகும் இப்படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார்.
வர்மா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதாநாயகி யார் என்கிற கேள்வி தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் துருவ் ஜோடியாக கெளதமியின் மகள் சுபலட்சுமி நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நடிகை கெளதமி இதுகுறித்து விளக்கம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறியதாவது:
என் மகள் திரையுலகில் அறிமுகமாவது குறித்த செய்திகளைக் கண்டு ஆச்சர்யமடைந்தேன். சுபலட்சுமி படிப்பில் மும்முரமாக உள்ளார். நடிப்பது குறித்து இப்போதைக்கு எவ்விதத் திட்டமும் கிடையாது. அவரை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.