2015-ல் வெளியான "ரோமியோ ஜூலியட்' படத்தில் உள்ள "டண்டனக்கா நக்கா நக்கா..' பாடலுக்காக தன்னிடம் அனுமதி வாங்கவில்லை என்று படக்குழுவினர் மீது டி. ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். பாடல் வெளியான சமயத்தில் நடிகர் டி.ராஜேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிடவும் மனுவில் கோரினார்.
இது தொடர்பாக அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது தனித்துவமான நடிப்பு, வசன உச்சரிப்பு, ஸ்டைல் ஆகியவை, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்துள்ள "ரோமியோ ஜூலியட்' என்ற படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள "டண்டனக்கா நக்கா நக்கா' என்ற பாடலை ரோகேஷ் என்பவர் எழுதி, இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.
விளம்பர நோக்கத்துடனும், உள்நோக்கத்துடனும் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு இடையே என்னுடைய பேச்சுக்கள், வசனங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. என்னுடையப் பேச்சுகள், வசனங்களைப் பயன்படுத்த அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அது தொடர்பாக என்னிடம் அனுமதியும் பெறவில்லை. தொலைக்காட்சி சேனல்கள், வானொலிகளிலும் அந்தப் பாடலை ஒளிபரப்பத் தடை விதிக்க வேண்டும். என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு வழங்க படத் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பின்னணி பாடியவர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இரு தரப்பினரும் மார்ச் 23-க்குள் தங்களுடைய பதிலை அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பிறகுதான் இந்த வழக்கை அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டுசெல்லமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.