நடிகர், இயக்குநராக மட்டுமல்லாமல் சமூக ஆர்வலராகவும் சேவை மனப்பான்மையும் உள்ளவர் ராகவா லாரன்ஸ். மதங்கள் தாண்டிய மனித நேயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்பவர். சேலத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ரயில் மறியலில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் சிலர் ரயிலின் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர். இதில், அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் எனும் இளைஞர், ரயில் பெட்டி மீதி நின்றிருந்தபோது எதிர்பாராத விதமாக மின் கம்பியில் மோதினார். இதில் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். மகனை இழந்து தவித்த அக்குடும்பத்துக்கு சுமார் ரூ.22 லட்சத்தில் வீடு கட்டிக் கொடுத்தார் ராகவா. இவை தவிர தனது அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு நிதியுதவி செய்வதும், ஆதரவற்ற பிள்ளைகளுக்கான ஒரு இல்லத்தையும் பராமரித்து வருகிறார். இதுவரை 142 குழந்தைகளின் வெவ்வேறு நோய்களுக்கு அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியும் அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ப்ரதீப் எனும் சிறுவனுக்கு தனது ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை சார்பில், இதய அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து குணமடைய வைத்துள்ளார் ராகவா லாரன்ஸ். இச்சிறுவனுக்கு 6 வயது. ராகவா லாரன்ஸின் இல்லத்திற்கு உதவி கேட்டு வந்த அவனை மருத்துவமனையில் சேர்த்து சிறுவனுக்கு நிதியுதவி செய்ய அன்புள்ளங்களை வேண்டி ட்வீட் செய்தார். இதயத்தில் சிறு துளையினால் அவதியுற்றிருந்த அச்சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். இச்சம்பவர்ம் குறித்து தனது ட்விட்டரில் கூறியிருப்பது: இதயத்தில் பிரச்னையுடன் எங்கள் இல்லத்துக்கு வந்திருந்து சிறுவன் ப்ரதீப்புக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதற்காக உதவியும், பிரார்தனையும் செய்த அனைவருக்கும் நன்றி. இந்தச் சிறுவனைப் போல் இதய கோளாறு இருக்கும் வசதி இல்லாத குழந்தைகளுக்கு உதவத் தயாராக உள்ளேன். எனவே தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் தற்போது 'காஞ்சனா 3' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.