காவலர்களுக்கு அதிக அழுத்தம் உள்ளதால்தான் மக்களிடம் கோபப்படுகிறார்கள்: நடிகர் கார்த்தி பேச்சு!

நன்றாக வேலை செய்யும் அதிகாரிகளைப் புகழ்ந்து பேசுவதில்லை. ஆனால் அவர்களைப் பற்றி தவறாக மட்டும்தான் பேசுகிறோம்...
காவலர்களுக்கு அதிக அழுத்தம் உள்ளதால்தான் மக்களிடம் கோபப்படுகிறார்கள்: நடிகர் கார்த்தி பேச்சு!

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் இணைந்து அமைத்துள்ள அறக்கட்டளையின் தொடக்க விழா நேற்று நடைபெற்றுள்ளது. இதில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி போன்றோர் கலந்துகொண்டார்கள். இந்த விழா முடிந்தபிறகு செய்தியாளர்களிடம் நடிகர் கார்த்தி பேசியதாவது: 

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்த பிறகு பொதுமக்களில் ஒருவனாகக் காவல்துறை அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். நேர்மையான காவல்துறை அதிகாரியாக இருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது எனக்கு. இங்கே நேர்மைக்காகக் கொடுக்கவேண்டிய விலை இன்னும் பெரிதாக உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது யார் என்று பார்த்தால் அவர்களுடைய குடும்பத்தினர்தான். காவல்துறை அதிகாரிகள் எப்போதும் பணியிலேயே இருப்பவர்கள். அவர்களுடைய குடும்பங்கள் நன்றாக இருந்தால்தான் அவர்களால் தைரியமாக வேலை செய்யமுடியும்.

இந்த நள்ளிரவிலும் வேலை செய்கிறார்களே காவல்துறை அதிகாரிகள், அவர்கள் சாப்பிட்டிருப்பார்களா என்று என்னுடைய மனைவி என்னிடம் கேட்டார். அப்படி இரவு பகல் பாராமல் வேலை செய்யும் காவல்துறையினருக்கு நலத்திட்ட உதவிகள் செய்ய ஓர் அறக்கட்டளை வேண்டும். அப்படிப்பட்ட அறக்கட்டளையைதான் நாங்கள் இப்போது நிறுவியுள்ளோம். இந்த அறக்கட்டளை இப்போது பணியில் உள்ள காவல்துறை அதிகாரிகளையும், ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் அவர்களுடைய குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளும் ஓர் அரணாக இருக்கும். இது பொதுமக்களால் முன்னின்று நடத்தப்படும் ஒரு விஷயமாக இருக்கும். இப்போது இது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. இது கண்டிப்பாக மேலும் வளரும்.

இங்கே இருக்கும் காவல்துறை அதிகாரிகள்  தூங்காமலேயே வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அழுத்தம் அதிகமாகிறது. அழுத்தம் அதிகமாவதால்தான் அவர்கள் மக்களிடம் கோபப்படுகிறார்கள். அவர்களுக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் தூங்க நேரம் கொடுக்கவேண்டும். அதேபோல் இன்னும் நிறைய காவல்துறை அதிகாரிகளைப் புதிதாக பணியமர்த்தினால்தான் தூங்காமல் அனைவரும் வேலை செய்கிற நிலைமையும் நிலை மாறும். அவர்களுக்குத் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் கிடையாது. அவர்கள் மனத்தளவில் சந்தோஷமாக இருந்தால்தான் அவர்கள் நம்மோடு பேசும்போது சந்தோஷமாகப் பேசுவார்கள். நாம் நன்றாக வேலை செய்யும் அதிகாரிகளைப் புகழ்ந்து பேசுவதில்லை. ஆனால் அவர்களைப் பற்றி தவறாக மட்டும்தான் பேசுகிறோம். நாமும் நிறைய மாற வேண்டும் என்பது என்னுடைய கருத்து. காவல்துறை அதிகாரிகளின் மனச்சுமை குறைய அரசு என்ன  செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை என்றார் கார்த்தி.

இந்த அறக்கட்டளைக்கு நடிகர் கார்த்தி, சக்தி மசாலா, ராம்ராஜ் காட்டன், வனிதா மோகன், ஆறுமுகசாமி ஆகியோர் தலா ரூ. 10 லட்சம் என ரூ. 50 லட்சம் அறக்கட்டளைக்கு நிதியாக வழங்கப்பட்டதாகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com