படப்பிடிப்பில் என்னிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட தெலுங்கு நடிகர்: ராதிகா ஆப்தே பேட்டி
தெலுங்குப் படத்துக்கான படப்பிடிப்பில் தெலுங்கு நடிகர் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாக நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.
நேஹா துபியாவுடனான BFFs with Vogue என்கிற நிகழ்ச்சிக்கான உரையாடலில் பிரபல நடிகை ராதிகா ஆப்தேவும் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவும் கலந்துகொண்டார்கள்.அப்போது இருவரிடமும் நேஹா துபியா ஒரு கேள்வி எழுப்பினார். நீங்கள் பிரபலமாகும் முன்பு இந்தத் துறையின் ஆரம்பக் காலக்கட்டங்களில் நீங்கள் எதிர்கொண்ட மோசமான அனுபவங்கள் என்ன?
இதற்கு ராதிகா ஆப்தே கூறிய பதில்: ஆரம்பகாலக் கட்டங்களில் தென்னிந்தியப் படங்களில் நடித்தேன். அவர்கள் நல்ல சம்பளம் வழங்குவார்கள். ஆனால் அவை மிகக் கடினமானவை என்றார்.
இதற்கு நேஹா, தென்னிந்தியத் திரையுலகில் பாலினச் சமத்துவம் குறைவாக உள்ளதாகக் கேள்விப்பட்டுள்ளேன் என்று கூறினார். இதற்கு ராதிகா ஆப்தே அளித்த பதில்:
நான் அப்படிப் பொதுமைப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நான் பணியாற்றிய படங்களில் பாலின சமத்துவம் இருந்ததில்லை. தென்னிந்தியத் திரையுலகில் நடிகர்கள் மிகவும் சக்திமிக்கவர்கள். படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு இரு மணி நேரத்துக்கு முன்பு வரச்சொல்லிக் காத்திருக்க வைப்பார்கள். உங்கள் வேறுவிதமாக நடத்துவார்கள்.
நான் நடித்த தெலுங்குப் படத்தின் முதல் நாள். ஒரு காட்சியில் உடல்நலமில்லாமல் நான் படுத்திருக்க வேண்டும். அக்காட்சி படமாக்கப்பட்ட போது நிறைய பேர் இருந்தார்கள். நடிகர் அப்போது நுழைந்தார். நாங்கள் காட்சிக்காக ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தோம். அவரை எனக்குத் தெரியாது. வந்தவுடன் என் காலை வருடினார்.
அவர் பெரிய நடிகர். மிகவும் சக்திவாய்ந்தவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் படப்பிடிப்பில் இருந்த அத்தனை பேர் முன்பும் அவர் மீது சீறினேன். அவரைப் பார்த்துச் சொன்னேன் - என்னிடம் ஒருபோதும் இதுபோலச் செய்யாதீர்கள். ஒருபோதும்... என்று கடுங்கோபத்தில் கூறினேன். அவர் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அவர் அதை எதிர்பார்க்கவில்லை. அதன்பிறகு அவர் என்னிடம் அதுபோல நடந்துகொள்ளவில்லை என்று பேட்டியளித்துள்ளார்.
ஆனால் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தபோது முற்றிலும் வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. ரஜினி மிக அருமையான மனிதர். அதுபோன்ற மோசமான அனுபவம் கபாலி படப்பிடிப்பில் எனக்கு நேரவில்லை என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.