பாலிவுட் நடிகர் குனால் கெமு ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகின. அதுவே அவருக்குச் சிக்கலை வரவழைத்துள்ளது.
குனால் கெமு ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய புகைப்படங்களை முன்வைத்து ட்விட்டரில் ஒருவர் மும்பைக் காவல்துறையிடம் புகார் அளித்தார். குனால் கெமு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற அவருடைய கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது மும்பைக் காவல்துறை.
குனால் கெமுவுக்கு ரூ. 500 அபராதம் விதித்து சலான் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான இ-சலான் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் குனால் கெமுவுக்கு அளித்த ட்வீட்டில், நீங்கள் பைக்கை விரும்புகிறீர்கள். நாங்கள் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பை விரும்புகிறோம். உங்கள் வருத்தம் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் என எண்ணுகிறோம். அடுத்தமுறை காலதாமதமாக உணரமாட்டீர்கள் என விரும்புகிறோம். இ சலான் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று குனாலுக்கு மும்பைக் காவல்துறை ட்வீட் வெளியிட்டுள்ளது. இதையடுத்து தன்னுடைய தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் குனால் கெமு.
இதற்கு முன்பு காரில் இருந்தபடி ஆட்டோவில் பயணித்த ரசிகையுடன் இணைந்து மும்பை சாலையில் செல்பி புகைப்படத்தை எடுத்துக்கொண்டார் நடிகர் வருண் தவன். இதன் புகைப்படம் ஊடகங்களில் வெளியானதை முன்வைத்து அவருக்கு அபராதம் விதித்தது மும்பைக் காவல்துறை. சீட்பெல்ட் அணியாமல் இருந்ததற்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்ததாக புகைப்படங்களை முன்வைத்து நடிகர் குனால் கெமு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.