பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த வருடம் வெளியான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மகத்தான சாதனைகளைப் படைத்தது.
இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த ராஜமெளலியின் அடுத்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் ராஜமெளலி அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார். இவர்கள் மூவரும் இணைவதால் இப்போதைக்கு இந்தப் படம் சமூகவலைத்தளங்களில் ஆர்ஆர்ஆர் எனக் குறிப்பிடப்படுகிறது. டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது.
ராஜமெளலியின் அடுத்தப் படத்திலும் பிரபாஸ் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோருக்குச் சென்றுள்ளது. படக்குழு குறித்த இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.