நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை கோரி மேலூரைச் சேர்ந்த கதிரேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவர், நடிகர் தனுஷை தனது மகன் என்றும், தனக்கு மாதம்தோறும் ஜீவனாம்சம் வழங்கக்கோரியும் மேலூர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த மேலூர் நீதிமன்றம், நடிகர் தனுஷ் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இந்த உத்தரவிற்கு தடை விதிக்கவும், மேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் தனுஷ் கடந்தாண்டு மனு செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான நடிகர் தனுஷின் உடலில் இருப்பதாக கதிரேசன் குறிப்பிட்ட அங்க அடையாளங்களை மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து மேலூர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தனுஷ் போலியான கல்விச் சான்றிதழ்கள், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தாக்கல் செய்த நீதிமன்றத்தை ஏமாற்றியதாக கூறி மதுரை கோ.புதூர் காவல் நிலையத்திலும், மாநகர காவல் ஆணையரிடம் கதிரேசன் புகார் அளித்தார். ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் தான் அளித்தப் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கதிரேசன் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. கதிரேசன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி அம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.