இந்த ஆண்டு ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன், தற்போது அதை பலப்படுத்தும் முயற்சியில் உள்ளார். பொதுக்கூட்டங்கள் நிகழ்த்தி மக்களைச் சந்தித்து வருகிறார். ட்விட்டரிலும் தன் கருத்துக்களைப் பதிவு செய்து அதில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். வெகு விரைவில் திருச்சியில் மிக பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்தவும் ஏற்பாடுகளை செய்து வருகிறார் கமல்.
கமல் நடித்து முடித்துக் கொடுத்துள்ள 'விஸ்வரூபம் 2' படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. அதற்கு அடுத்து ஷங்கரின் 'இந்தியன் 2' படத்தில் மட்டும் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு வருகை தரவிருக்கும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கமல்ஹாசனை சந்திக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பல படங்களை இயக்கி உலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக கிறிஸ்டபர் நோலன் இருந்துவருகிறார். உலகின் கடைகோடியிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு. இந்தியாவிலும் அவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் மிகையில்லை. நோலனின் வெற்றிக்குக் காரணம் அவருடைய படங்கள் அனைத்தும் மேக்கிங்கிற்கு புகழ்ப் பெற்றவை, மேலும் அறிவார்ந்த விஷயங்களை உள்ளடக்கியவை. கமர்ஷியலாகவும் அவை மிகப் பெரிய வெற்றிகளை ஈட்டித் தந்தவை. பாக்ஸ் ஆபிஸ் சூப்பர் ஹிட் படங்களாக மட்டும் இல்லாமல், அவை உலகின் முக்கிய விருதுகள் பலவற்றையும் அள்ளிக் குவித்தவை. திரை ரசிகர்கள் மட்டுமல்லாது திரை விமரிசகர்கள் கொண்டாடும் ஒரு கலைஞன் கிறிஸ்டோபர் நோலன். அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களான 'மொமென்டோ', 'இன்டர்ஸ்டெல்லார்', 'இன்செப்ஷன்', 'டன்கிர்க்' ஆகியவை உலகப் புகழ்ப்பெற்று இன்றளவும் டிவிடி விற்பனைகளில் சாதனை படைத்துவருகிறது.
மார்ச் 29-ம் தேதி தனது மனைவி எம்மா தாமஸுடன் மும்பை வருகிறார் கிறிஸ்டோபர் நோலன். நோலன் இயக்கிய 'டன்கிர்க்' திரைப்படம் அவரது முன்னிலையில் சிறப்பு திரையிடல் செய்யப்படவுள்ளது. அங்கு அவர் கலந்துரையாடுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் முடிந்த பின்னர், நோலன் பாலிவுட் மற்றும் கோலிவுட்டை சேர்ந்த முக்கிய பிரபலங்களை சந்திக்கவிருக்கிறார்.
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், பிக் பி அமிதாப் பச்சன், ஷாருக் கான், அமிர் கான், இயக்குநர் அனுராக் காஷ்யப், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் உள்ளிட்ட இந்தியாவின் திரை ஆளுமைகளோடு நோலன் கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த செய்தி கமல் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.