ராணி முகர்ஜியின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த படம் ஹிச்கி. இது பாலிவுட்டில் அவருக்கு ரீ எண்ட்ரியாக அமைந்து நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படம் நன்றாக ஓடாவிட்டால் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளார் ராணி முகர்ஜி. அண்மையில் இந்தி பத்திரிகைக்கு பேட்டி அளித்த ராணி முகர்ஜி ஸ்ரீதேவி தன்னிடம் பகிர்ந்து கொண்ட ஆசையொன்று நிறைவேறுவதற்குள் அவர் இறந்து விட்டதைப் பற்றிக் கூறி வருத்தப்பட்டார்.
அவர் கூறியது, 'கடந்த இரண்டு மாதத்தில் என் வாழ்க்கையில் முக்கியமான இரண்டு பேரை இழந்துவிட்டேன், என் அப்பா மற்றும் ஸ்ரீதேவி ஆகிய இருவரின் மறைவுதான் அது. நான் பள்ளியில் படிக்கும் போது யூனிபார்ம் மற்றும் ஸ்கூல் பேகுடன் ஸ்ரீதேவி நடித்துக் கொண்டிருந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போவேன். என் மாமா ஷோமு முகர்ஜி தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்துக் கொண்டிருப்பார்.
செட்டுக்கு முடிந்த போதெல்லாம் அவரை போய் பார்த்து பிரமிப்பேன். அந்தளவுக்கு எனக்கு மிகவும் பிடித்த நடிகை அவர். என்னுடைய பதின்வயதில் அவர் நடித்த சாந்தினி, லாம்ஹே போன்ற படங்களை பார்த்து மிகவும் கவரப்பட்டேன். அதன் பின் நான் நடிகையான பின்னரும் அவர் தான் எனக்கு ஆதர்சம். என் சொந்த வாழ்க்கையிலும் சரி, நடிப்புத் துறையிலும் சரி அவர்தான் என் ரோல்மாடல்.
ஸ்ரீதேவியை என் சொந்த அக்கா போலத்தான் நினைப்பேன். என் மகள் ஆதிரா பிறந்த பின் ஸ்ரீதேவி குழந்தை வளர்ப்பு பற்றி நிறைய சொல்வார். ஆதிராவுக்கு ஸ்ரீதேவி பெரியம்மா போலத்தான். நாங்கள் அந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் நெருக்கமாகி விட்டோம். எங்கள் மீது அவர் பொழிந்த அன்பு ஆழமானது.
ஸ்ரீதேவி துபய் சென்றபோது நான் ஹிச்கி படத்தின் விளம்பர நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தேன். துபய் செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன், சரியாக சொல்வதென்றால், 15 நாட்களுக்கு முன்னால் எனக்கு ஃபோன் செய்தார் ஸ்ரீ, 'லட்டூ (இப்படியொரு செல்லப்பெயரில் தான் என்னை அழைப்பார்) நான் ஹிச்கி படத்தின் ட்ரெயிலர் பார்த்தேன். படம் பார்க்கவும் ஆவலாக இருக்கிறேன்’ என்று கூறினார். படம் வெளியானதும் அவருக்கு போட்டுக் காட்டி அவருடைய கருத்தை தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் அதற்குள் அவர் மரணச் செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. அவரின் மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு’ என்று ராணி முகர்ஜி கூறினார்.