தமிழ், தெலுங்கு, மலையாள என மும்மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ரசிகர்களை மட்டுமின்றி கோலிவுட் டோலிவுட் நடிகர்களுக்கும் மிகப் பிடித்தமானவர் நயன்தாரா.
சம்பளம் அதிகம் வாங்குகிறார், கோபமாக நடந்து கொள்கிறார் என அவரைப் பற்றி விமரிசனங்கள் வந்த போதும், தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கு அச்சு அசலாக உயிர் கொடுத்து மிகச் சிறப்பான பங்களிப்பைத் தருவதால் மோஸ்ட் வாண்டட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவ்வாறு ரசிகர்களின் மனதை நீண்ட காலமாக ஆட்சி செய்து வரும் நயன்தாராவின் மனத்தில் உள்ளவர் அவரது அன்புக் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன். இருவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றுத் தரும். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் விருது வாங்கும் போது நயன்தாரா தனது வருங்கால கணவருக்கு நன்றி கூறினார். விக்னேஷ் சிவனின் பெயரை அவர் குறிப்பிடாமல் இருந்தாலும அவர் விக்னேஷைத் தான் சொல்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
போலவே, சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாராவை புகழ்ந்து பேசினார். அவர் கூறியது, ‘மற்ற நடிகைகளைவிட நயன்தாரா தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. அவர் ஒரு இரும்புப் பெண்மணி. அதனால், நயன் என்னுடைய விருப்பத்துக்கு எப்போதும் உரியவர். நான் மிகவும் லக்கி’ என்று நெகிழ்ச்ச்சியாக பேட்டியளித்துள்ளார்.
இதுவரை நயன்தாராவும் சரி விக்னேஷ் சிவனும் சரி தங்கள் உறவுநிலைப் பற்றி மனம் திறந்திருக்கவில்லை. இருவருமே பொதுவெளியில் வெளிப்படையாக பேசியிருப்பதால் விரைவில் அவர்கள் திருமண உறவில் இணையலாம் என்று தெரிகிறது.