ஆர்யாவின் முதல் கன்னடப் படத்தின் ஸ்டில் இது. அந்தப் படத்தின் பெயர் ‘ராஜரதா’. சாண்டல்வுட்டின் முக்கியமான இயக்குநராக வளர்ந்து வரும் அனுப் பண்டாரியின் இரண்டாவது படம் இது. 2015-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான ‘ரங்கி தரங்கா’, திரை விமர்சகர்களின் கவனத்தைப் பெற்றதுடன் விருதுகளையும் குவித்தது.
‘ரங்கி தரங்கா’ படத்தின் கதாநாயகனான நிரூப் பண்டாரி, இயக்குநர் அனுப் பண்டாரியின் தம்பி ஆவார். 2016-ம் ஆண்டு காவிரிப் பிரச்னையின் போது கே.பி.என் பேருந்து நிறுவனத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இன வெறியர்களால் கொளுத்தப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து ‘ராஜரதா’ படத்தின் கதை உருவாகியது. இந்தப் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நம்ம ஊர் ஆர்யா நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் தாதாவாக நடித்து அசத்தியுள்ளார் ஆர்யா.
இந்தப்படம் ராஜரதம் என்று தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படுகிறது. மலையாளத்தில் மோகன் லாலுடன் தி க்ரேட் ஃபாதர் எனும் படத்தில் கெத்தான போலீஸாக நடித்துள்ளார் ஆர்யா. தமிழில் அதிகப் படங்கள் நடிக்காவிட்டாலும் பிற மொழிப் படங்களில் கவனம் செலுத்துவதும், எங்க வீட்டு மாப்பிள்ளை போன்ற சானல் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும் என செம பிஸியாகவே இருக்கிறார் ஆர்யா.
அண்மையில் வெளியான கஜினிகாந்த் ட்ரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரைத் துறையினரின் கவனம் பெற்று பரவலான பாராட்டுக்களை பெற்று வருகிறது. அடுத்து சந்தனத் தேவன் மற்றும் சங்கமித்ரா ஆகிய படங்களில் நடிக்கிறார் ஆர்யா.