தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு இயக்குநர் பா. இரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிகழாண்டு ஒதுக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வு (நீட்) மையங்களை மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதியாக தெரிவித்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்தது.
இந்நிலையில் இயக்குநர் பா. இரஞ்சித் ட்விட்டர் வழியாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் ட்வீட் செய்ததாவது:
நீட்தேர்வு மாணவர்கள் மேல் நிகழ்த்தப்படும் அநீதி. நீட் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிவந்த மாணவர்கள், இன்று எங்கள் மாநிலத்துக்குள்ளேயே தேர்வெழுத அனுமதியுங்கள் என்று கெஞ்சும் நிலைக்குப் போனதற்கு காரணம் மத்திய அரசும் அதன் நிழல் போல இருக்கும் மாநில அரசும் தான் என்று தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'நீட் தேர்வு நடைபெற குறைந்த கால அவகாசமே உள்ளதால், தேர்வு மையங்களை திடீரென மாற்ற முடியாது. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார். இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், நிகழாண்டில் ஒதுக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையங்களை திடீரென மாற்றினால் மாணவர்கள் குழப்பமடைவர். எனவே, தேர்வு மையங்களை மாற்றத் தேவையில்லை. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதே சமயம், தமிழக மாணவர்கள் அடுத்த ஆண்டில் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சிபிஎஸ்இ நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.