மூன்று முறை மணிரத்னம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டு வருந்தும் நடிகை!

மதுபாலா நடித்த அந்த வேடத்திற்காக முதலில் அணுகப்பட்டவர் ஐஸ்வர்யா. ஆனால் அந்த சமயத்தில் தெலுங்குப் படமொன்றில் நடிக்க முன்பணம் பெறப்பட்டமையால்
மூன்று முறை மணிரத்னம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டு வருந்தும் நடிகை!

பழம்பெரும் நடிகை லட்சுமியைத் தெரியாதவர்கள் யார்? அவரது மகள் நடிகை ஐஸ்வர்யாவும் பிரபல திரைப்பட நடிகையே. 90 களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகலில் நாயகியாக நடித்து வந்தவர் தற்போது மெகாசீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்யா யூ டியூப் சேனல் ஒன்றுக்காகத் தான் அளித்த நேர்காணலொன்றில் மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்க தனக்கு கிடைத்த மூன்று அருமையான வாய்ப்புகளைத் தான் தவற விட்டு விட்டதாகக் கூறி வருந்தினார்.

அந்த மூன்று வாய்ப்புகளில் ஒன்று  ‘ரோஜா’ திரைப்படத்தின் நாயகி வேடம். மதுபாலா நடித்த அந்த வேடத்திற்காக முதலில் அணுகப்பட்டவர் ஐஸ்வர்யா. ஆனால் அந்த சமயத்தில் தெலுங்குப் படமொன்றில் நடிக்க முன்பணம் பெறப்பட்டமையால் ஐஸ்வர்யாவின் பாட்டியும், பாகவதர் காலத்து சூப்பர் ஸ்டாரிணி நடிகைகளில் ஒருவருமான நடிகை ருக்மிணி அம்மையார், தன் பேத்தியால் மணிரத்னம் படத்தில் நடிக்க இயலாது என்று கூறி விட்டாராம். இதனால் ரோஜா திரைப்பட வாய்ப்பு ஐஸ்வர்யா கையிலிருந்து நழுவியதோடு நம்பி நடித்த தெலுங்குப் படமும் முழு படப்பிடிப்பு நடக்காமல் பாதியில் நின்று போனது என்று கூறி வருந்துகிறார் ஐஸ்வர்யா.

அந்தத் திரைப்படம் மட்டுமல்ல அதற்கும் முன்பே ‘அஞ்சலி’ திரைப்படத்தில் பானுப்ரியாவின் தங்கை நிஷாந்தி நடனமாடிப் பாடுவது போல படமாக்கப்பட்ட ‘இரவு நிலவு உலகை ரசிக்க’  பாடலுக்காகவும் முதலில் அணுகப்பட்டவர் ஐஸ்வர்யா. அதில் நடிக்கும் வாய்ப்பையும் தன் அம்மா லட்சுமியால் தான் தவற விட்டு விட்டதாக கூறுகிறார் ஐஸ்வர்யா. காரணம் ஒரு பாடலில் நடிக்கும் வாய்ப்பு வேண்டாம், என் மகளை சொந்த பேனரில் நாயகியாக நடிக்க வைத்து நானே லாஞ்ச் செய்யவிருக்கிறேன் எனக்கூறி நடிகை லட்சுமி மணிரத்னத்தின் வாய்ப்பை மறுத்ததால் அந்தப் பட வாய்ப்பும் ஐஸ்வர்யாவிடம் இருந்து நழுவியது.

மூன்றாவதாக ‘திருடா, திருடா’ திரைப்படத்தில் ஹீரா வேடத்தில் நடிக்க முதலில் மேக் அப் டெஸ்ட் எடுக்கப்பட்டது ஐஸ்வர்யாவுக்குத்தான். அந்தப் படத்தையும் ஒரு இந்திப் படத்தில் நடிக்கப் போனதின் காரணமாகத் தான் தவற விட்டுவிட்டதாக ஐஸ்வர்யா தனது நேர்காணலில் குறிப்பிட்டார். இந்தியாவில் அனைத்து மொழி நடிகர், நடிகையரும் மணிரத்னம் படத்தில் நடிப்பதைத் தங்களது கனவாக வைத்துக் கொண்டு தவமிருக்க... தானோ உப்புச் சப்பில்லாத காரணங்களுக்காக மூன்று முறை தனக்குக் கிடைத்த அருமையான வாய்ப்புகளை தவற விட்டுவிட்டோமே என்று வருந்தாத நாளில்லை என்று கூறும் ஐஸ்வர்யா... இனியொரு வாய்ப்பு அது முக்கியத்துவம் இல்லாத வேடமாக இருந்தாலும் கூட சரி... வெறும் செட் பிராப்பர்டியாகக் கூட மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைக்குமாயின் அதைத் தவற விடப்போவதில்லை என்று கூறிச் சிரிக்கிறார்.

முகப்புப் படம்: சித்தரிப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com