விஷால் நடித்துள்ள இரும்புத்திரை பட வெளியீட்டுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
நடிகர் விஷால் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள இரும்புத்திரை படத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் தாக்கல் செய்த மனுவில், நடிகர் விஷால் நடித்துள்ள இரும்புத்திரை திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட ஆதார் அடையாள அட்டை குறித்து தவறாகச் சித்திரித்து காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஆதார் அடையாள அட்டைக்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களைத் தவறாக பயன்படுத்துவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகளுடன் திரைப்படம் வெளியானால், டிஜிட்டல் இந்தியா மற்றும் ஆதார் திட்டங்கள் குறித்து மக்களிடம் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதுடன் அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள். எனவே, சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் வரை இந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியம் தணிக்கை செய்த பிறகு படம் வெளியாவதால் இரும்புத்திரை படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இதையடுத்து வரும் 11-ம் தேதி இரும்புத்திரை படம் வெளியாகவுள்ளது.