செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைகிறார். இந்தப் படத்தில் மோகன் லாலும் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
லைக்கா தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்து - பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவாளர் - கேவ்மிக் யு அரி, கலை - கிரண்.
அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் இணைகிறார்கள். ஒரு படத்தின் தோல்விக்குப் பிறகு அப்படத்தின் நடிகர் - இயக்குநர் கூட்டணியை மீண்டும் காணமுடியாது. ஆனால் மாற்றான் படம் வெற்றியடையாவிட்டாலும் கே.வி.ஆனந்துடன் மீண்டும் இணைகிறார் சூர்யா.
அயன், மாற்றான் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். அதன்பிறகு மீண்டும் கே.வி. ஆனந்த் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ள கேவ்மிக் - ஜிகர்தண்டா, அம்மா கணக்கு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மோகன்லால், கடைசியாக 2014-ல் ஜில்லா படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். அதன்பிறகு இப்போதுதான் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.