சென்னை: 'இரும்புத்திரை' திரைப்பட இயக்குநர் மித்ரனின் அடுத்த பட ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புதுமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த 11-ம் தேதி வெளியான படம் ‘இரும்புத்திரை’. விஷால் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அர்ஜுன் வில்லனாகவும், சமந்தா ஹீரோயினாகவும் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இந்நிலையில் 'இரும்புத்திரை' திரைப்பட இயக்குநர் மித்ரனின் அடுத்த பட ஹீரோ யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பி.எஸ்.மித்ரனின் இரண்டாவது படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே சூர்யா நடிப்பில் வெளியான ‘சிங்கம் 2’ படத்தைத் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக, புதுமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. அதைத் தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்று தெரிகிறது.