பிரபல நடிகை ஸ்ரீதேவி பிப்ரவரி 24, 2018 அன்று மரணமடைந்தார். அவரது கணவர் போனி கபூரின் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் துபைக்கு சென்றார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஸ்ரீதேவி உயிரிழந்தகாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் தங்கியிருந்த அறையின் குளியல் தொட்டியில் மூழ்கித்தான் அவர் உயிரிழந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவரது உடல் இந்தியா கொண்டுவரப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே, ஸ்ரீதேவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருந்ததால், விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சுனில் சிங் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது போன்ற மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி, சுனில் சிங்கின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
ஸ்ரீதேவியின் மறைந்து, கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடிந்த நிலையிலும் அவரது மரணம் குறித்த சந்தேகங்களும் கேள்விகளும் தொடர்கின்றன. அவரது மரணம் இயற்கை மரணமல்ல, அது திட்டமிடப்பட்ட கொலை என்று பல்வேறு ஊகங்களும் இன்றளவும் நிலவி வருகின்றன. இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கினைத் தொடர்ந்தார். அதில், '5.7 அடி உயரம் உள்ள ஒருவர், 5.1 அடி குளியல் தொட்டியில் எப்படி மூழ்க முடியும் என்று கேள்வியை எழுப்பினார். துபய் போலீஸார் நடத்திய விசாரணையில் ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகப்படும் அம்சம் எதுவுமில்லை என்பதை சுட்டிக் காட்டி, அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டதாக உச்சநீதி மன்றம் விளக்கமளித்தது.
ஆனால் இந்த பதில்களால் சமாதானம் அடையாத விகாஸ் சிங் தற்போது மீண்டும் உறுதியாக ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். அவர் கூறியிருப்பது, ‘நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் ஓமன் நாட்டில் ரூ. 240 கோடிக்கு இன்ஷுரன்ஸ் செய்யப்படுள்ளது என்றும், அது ஸ்ரீதேவி அந்நாட்டில் இறந்தால் மட்டுமே பணம் கிடைக்கும் என்கிறது அதன் பத்திரம். அதன்படி ஸ்ரீதேவியும் சரியாக துபையில் இறந்துள்ளார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது' என்று விகாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீதேவியின் மரணத்தில் தாவூத் இப்ராஹிம் பங்கு உள்ளது என்று ஓய்வுபெற்ற ஏசிபி வேத் பூஷன் ஸ்ரீதேவியின் மரணம் திட்டமிடப்பட்ட கொலை என்று கூறியுள்ளார். அவரது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்த ஸ்ரீதேவி துபையில் தங்கியிருந்த ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் அவரும் சில நாட்கள் தங்கி, தனிப்பட்ட முறையில் தன் குழுவினருடன் விசாரணையில் இறங்கினார். அந்த ஹோட்டல் தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. வேத் பூஷன் தற்போது ஸ்ரீதேவியின் மரணம் குறித்து மறு விசாரணை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்விருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஸ்ரீதேவியின் மரணத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.