நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் நடிகையர் திலகம் என்கிற பெயரிலும் தெலுங்கில் மகாநடி என்கிற பெயரிலும் வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் பத்திரிகையாளராக சமந்தாவும் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சாவித்திரியாக தத்ரூபமாக நடித்துள்ளார், தேசிய விருது நிச்சயம் போன்ற பாராட்டுகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாநடி படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர்கள் கலந்துகொண்டார்கள். தன்னைக் கெளரவப்படுத்திய ஆந்திர முதல்வருக்கு கீர்த்தி சுரேஷ் நன்றி தெரிவித்தார்.
இப்படத்தைத் தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம், அமராவதி நகரின் வளர்ச்சிக்காக ரூ. 50 லட்சத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார்கள்.