'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று' போன்ற படங்களைத் தயாரித்த எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில் உருவான படம் 'அருவி'. அருண் பிரபு இயக்கிய இந்தப் படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன் போன்றோர் நடித்தார்கள். இசை - பிந்து மாலினி & வேதாந்த் பரத்வாஜ். படவிழாக்களில் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. சிறிய பட்ஜெட்டில் உருவான படமாக இருந்தாலும் தமிழகம் முழுக்க நல்ல வசூலையும் பெற்றது. இதனால் அருண் பிரபுவின் அடுத்தப் படம் குறித்த ஆர்வம் மேலும் அதிகமானது.
இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டூடியோ தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தை இயக்கவுள்ளார் அருண் பிரபு. இதுபற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா வெளியிட்டுள்ளார். குமுளி லோயர் கேம்ப் பகுதியில், இயற்கையான சூழலின் நடுவே இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
நடிகர்கள் உள்ளிட்ட படக்குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் அருண் பிரபு தன்னுடைய 2-வது படம் பற்றி கூறியதாவது:
அருவி போன்ற கலவையான பாணியில் எனது இரண்டாவது படம் இருக்கும். அருவி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு இந்தக் கதையைத் தயார் செய்து விட்டேன். நடிகர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. மூன்று வாரங்களில் இதுபற்றி விவரங்கள் வெளியிடப்படும். ஒன்று மட்டும் சொல்லமுடியும், இது இரு கதாநாயகர்கள் உள்ள கதை அல்ல.
தயாரிப்பாளர் ஆர்டி ராஜாவும் நானும் இந்தப் படம் குறித்து சில மாதங்களாகவே பேசிவந்தோம். இப்போது பூஜை நடைபெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. பெளர்ணமி நாள் என்பதால் பட அறிவிப்பை வெளியிட்டோம். அருவியில் புதுமுகங்களை நடிக்கவைக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்யவில்லை. தானாக அதுபோல அமைந்தது. என்னுடைய இரண்டாவது படத்திலும் புதுமுகங்கள் நடிக்கிறார்களா என்கிற கேள்விக்கு இப்போதைக்கு என்னால் பதில் சொல்லமுடியாது என்று கூறியுள்ளார்.