மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. விஜய்யின் 63-வது படமான இது அவருடைய திரைப்படங்களில் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தெறி, மெர்சல் படத்துக்குப் பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யுடன் இணைந்து தயாரிக்கும் 3-வது படமிது.
ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு என தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் 2019 தீபாவளிக்கு வெளியிடப்படவுள்ளது.