அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராக அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர், பரியேறும் பெருமாள் என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.
இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது. காதல், ஆக்ஷன் அடங்கிய ஜனரஞ்சகமான படமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் கதாநாயகனாகவும் ஆனந்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு - ஸ்ரீதர். கலை - ராமு.
செப்டம்பர் 28 அன்று வெளியாகியுள்ள இப்படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்துவருகின்றன. இந்நிலையில் இன்று இப்படத்தைப் பார்த்த கமல், இயக்குநரையும் தயாரிப்பாளரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் எழுதியதாவது:
மக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு என் வாழ்த்துக்கள். நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள். இந்த நல்ல செயலைத் தொடரவும் என்று கூறியுள்ளார்.