அழகிப் போட்டிகளின் சுவாரஸ்யமான பகுதி என்னவென்றால் கேள்வி பதில் ரவுண்ட்தான். இது அழகிகளின் அழகை மட்டுமல்லாமல் புத்திசாலித்தனத்தையும், பொது அறிவையும் சோதிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
இதற்கு முன் பல அழகிப் போட்டிகளில் நடுவர்கள் கேட்ட மிகச் சாதாரண கேள்விகளுக்குக் கூட அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அழகிகள் பதில் கூறிய சரித்திரம் உள்ளது. அத்தகைய நிகழ்வொன்றுதான் வங்கதேசத்தில் அண்மையில் நடந்த மிஸ் பங்களாதேஷ் அழகிப் போட்டியில் நிகழ்ந்தது. இப்போட்டியில் பல அழகிகள் கலந்துக் கொண்டனர். இந்தப் போட்டியில் அழகுடன் சேர்ந்து அறிவுபூர்வமான கேள்விகளும் கேட்டகப்பட்டனர்.
அப்போது போட்டியில் கலந்துக் கொண்ட பெண் ஒருவர் அளித்த பதில் நடுவர்களை மட்டுமில்லை ஒட்டுமொத்த அழகிகளையுமே வாய் விட்டு சிரிக்க வைத்தது. அந்த பெண்ணிடம் நடுவர்கள் H20 என்றால் என்ன என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அந்த பெண் ரெஸ்டாரண்டா? என்று முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு கேட்டார். அதிர்ச்சியான நடுவர் அந்த அழகிக்கு H20 என்றால் தண்ணீர் என்று பதிலுரைத்தார். உடனே தவறை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட அந்த அழகி, மழுப்பியவாறு எங்கள் ஊரில் H20 என்ற உணவுக் கடை உள்ளது அதனால் தான் அப்படி கேட்டேன் என்று சமாளித்தபடி சிரித்தார்.
அதன் காணொலி இதோ:
இந்த கேள்வி பதில் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகிவிட்டது. நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளாகிய அழகியின் பதில் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தக் காணொலி இதுவரை 437,998 பார்வையாளர்களை யூட்யூப்பில் பெற்றுள்ளது.
ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட அழகிப் போட்டியில் பங்கேற்றவர்கள் கேள்வி பதில் போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர்கள் அளித்த அறிவார்ந்த பதில்களின் தொகுப்பு.
1. ரீட்டா ஃபரியா - 1966
கேள்வி: நீங்கள் ஏன் மருத்துவர் ஆக வேண்டும் என விரும்புகிறீர்கள்?
பதில்: இந்தியாவுக்கு அதிகமான மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவர்கள் தேவை.
கேள்வி: ஆனால் இந்தியாவில் அதிக குழந்தைகள் உள்ளார்களே?
பதில்: அதை ஊக்குவிப்பதை தவிர்க்கவே மருத்துவர்கள் தேவை என கூறினேன்.
2. ஐஸ்வர்யாராய் - 1994
கேள்வி: 1994-ம் ஆண்டு பட்டம் வெல்லப் போகும் உலக அழகி என்ன குணங்களை உட்கொண்டு இருக்க வேண்டும்?
பதில்: இதுவரை உலக அழகி பட்டம் வென்றவர்களிடத்தில் காணப்படும் இரக்க உணர்வு மிக முக்கியம். அழகியானவள் ஒடுக்கப்பட்டோருக்கு தேவையான பரிவை அளிக்க வேண்டும். இதுவரை மனிதர்களால் உருவாக்கப்பட்ட தடைகள் அனைத்தையும் தாண்டி அவரது பார்வை இருக்க வேண்டும். அது தான் ஒரு உண்மையான உலக அழகிக்கான சான்று.
3.டயானா ஹெய்டன் - 1997
கேள்வி: நீங்கள் இந்த உலகில் இருக்கும் வேறொருவராக இருக்க விரும்பினால், யாராக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
பதில்: பிரிட்டன் நடிகை ஆட்ரி ஹெப்பர்னாக இருக்க விரும்புகிறேன். அழகு, இரக்கம், அமைதி ஆகியவை ஒரு சேர அமைந்த ஒளி போன்று பிரதிபளிக்கும் அவரை மிகவும் ரசிக்கிறேன்.
4. யுக்தா முகி - 1999
கேள்வி: ஒரு மகளாக உங்களது பெற்றோருக்கு என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள்?
பதில்: நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த நன்மதிப்பின் சான்றாக எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டு விலக மாட்டேன். இதன் மூலம் குடும்பத்தின் மதிப்பு, நெறிமுறைகள் போன்றவற்றுக்கு உதாரணமாக இவ்வுலல் உள்ள அனைவருக்கும் திகழ வேண்டும்.
5. பிரியங்கா சோப்ரா - 2000
கேள்வி: மிகவும் மதிக்கத்தக்க பெண்மணி என நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்? ஏன்?
பதில்: பல பெண்களை ரசிப்பதுடன், அவர்கள் மீது அதீத நம்பிக்கையும் கொண்டுள்ளேன். இவர்களில் நான் மிகவும் மதிக்கும் பெண்மணியாக அன்னை தெரசா திகழ்கிறார். அவரது கருணை, பரிவு, அன்பு ஆகியவை மற்றவர்களின் வாழ்க்கையை அழகானதாக மாற்றியது.
6. மனுஷி சில்லார் - 2017
கேள்வி: எந்த வேலை மிகவும் அதிகம் சம்பளத்துக்கு தகுதியானது? ஏன்?
பதில்: நான் எனது அம்மாவுக்கு நெருக்கமானவர் என்பதால், ஒரு தாய்க்குத்தான் அன்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். வேலை என்பது பணம் சார்ந்த விஷயமாக மட்டும் இருக்கக் கூடாது. எனது தாய் என் வாழ்வில் எப்போதும் மிகப் பெரிய உந்து சக்தியாகவே திகழ்ந்துள்ளார். தங்களது குழந்தைகளுக்காக பல விஷயங்களை தியாகம் செய்யும் அனைத்து அம்மாக்களுக்கும் இதற்கு தகுதியானவர்கள். எனவே அதிக சம்பளத்துக்கு தகுதியானவர்கள் அம்மாக்கள்தான்.