நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு! பரிந்துரைக்கிறார் நடிகை கஸ்தூரி!

பார்ப்பவர்களுக்கு கோமாளித்தனமாகத் தோன்றினாலும் அதை நம்பி அவர் பின்னால் கூடி நிற்கும் மூளை மழுங்கிய கூட்டத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு! பரிந்துரைக்கிறார் நடிகை கஸ்தூரி!

நித்யானந்தா... இந்தப் பெயரை சாமன்யத்தில் தமிழர்கள் மறந்து விடக்கூடாது என்று நினைத்துத் தானோ என்னவோ சில வருடங்களுக்கு முன் தனியார் செய்தி ஊடகமொன்று அவரது அதிரி புதிரி சிற்றின்ப வீடியோ ஒன்றை அப்பட்டமாக அனைத்து வீடுகளின் வரவேற்பறை வரை கொண்டு சென்றது. அந்த நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டோ, எதையாவது கொறித்துக் கொண்டோ அல்லது அசட்டையாக சோம்பல் முறித்துக் கொண்டோ அல்லது சிறு சண்டையிட்டுக் கொண்டோ தேமேவெனத் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அத்தனை நேயர்களும் அதிர்ச்சியின் உச்சத்தை அடைந்து உச்சி முடி நட்டுக் கொண்டு நிற்காத குறையாகப் பீதியில் உறைந்தார்கள். சிலருக்குப் பிறகு அது கிளர்ச்சியூட்டக் கூடிய வீடியோவாகவும் அமைந்திருக்கலாம். ஆனாலும் அத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான நித்யானந்தா இன்னும் அடங்கியபாடில்லை. இவராகத்தான் இப்படியெல்லாம் வீடியோக்களை லீக் செய்கிறாரா? அல்லது பக்த சிகாமணிகள் இந்த அசகாய சுவாமிஜீயின் அற்புத லீலைகளைக் கசிய விடுகின்றனரா? என்று தெரியவில்லை. சமீபத்தில் இணையத்தில் கசிய விடப்பட்டுள்ள இந்த வீடியோவைக் காணுங்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

‘நமோ நமோ நித்யானந்தாய்... நமோ நமோ நித்யானந்தாய்
ஓம் நமோ நித்யானந்தாய் சதாசிவாயா ஹோ
நித்யானந்த சதாசிவ மஹாதேவஸ்யே
என்ன உன் அழகு ஜடாமுடி மீசை!’

இந்த வரிகள் தான் இதில் ஹைலைட். நித்யானந்தாவைக் கடவுளின், ஏகாம்பரேஸ்வரரின் அவதாரம் என்று நினைத்து பெண் சிஷ்யைகள் பாடும் பாடல் இது. இதில் கூடுதலாக கம்யூட்டர் கிராபிக்ஸ் வேலையெல்லாம் செய்து மனிதர் சித்து விளையாட்டுகள் வேறு காட்டுகிறார். பார்ப்பவர்களுக்கு கோமாளித்தனமாகத் தோன்றினாலும் அதை நம்பி அவர் பின்னால் கூடி நிற்கும் மூளை மழுங்கிய கூட்டத்தை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

இந்த வீடியோவைக் குறித்து நடிகை கஸ்தூரி கூட தன்னுடைய சமீபத்திய ட்வீட்டில் குறிப்பிட்டு... இத்தனை வீரப் பராக்கிரமங்களை உள்ளடக்கிய நித்யானந்தா கூடுதலாக விலங்குகளையும் அற்புதமாகத் தமிழ் பேச வைக்கிறாராமே? இவருக்கெல்லாம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தந்தால் என்ன? என்று பரிந்துரைத்திருக்கிறார். 

கஸ்தூரியின் ட்வீட்...

கஸ்தூரிகள் கிண்டலடித்து என்ன செய்ய? 

‘திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும் அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கும்’ கதையாக ஒரு பக்கம் நித்யானந்தாவின் மீதான குற்றப் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தாலும் அவரதுஅபிமானிகள் அவரைக் கொண்டாடி அதை வீடியோ எடுத்து வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

புகைப்படத்தில் நித்யானந்தா அணிந்திருக்கும் நகைகளைப் பாருங்கள். நகை வெறி பிடித்த பெண்கள் கெட்டார்கள் போங்கள்! மோடி அரசு நகை வரம்புச் சட்டம் ஒன்றை அமல்படுத்தியதே.. அந்த வரம்புக்குள் இந்த சுயம்புச் சாமியார் வரமாட்டாரா?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com